Monday, June 21, 2010

புல்லைத் தின்னும் மிருகங்கள்

பக்தி என்பது தூய்மையை அடிப்படையாக கொண்டே எழுகிறது. புறத்தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால், அதைக் காட்டிலும் மேன்மையான அகத்தூய்மையை மாற்ற முடியாது. அகத்தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீண் எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத்தூய்மை யை அடையலாம்.

எண்ணம், சொல், செயல் இவற்றால் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க வேண்டும். புலால் உண்ணாமல் இருப்பதால் மட்டும், யாரும் தூயவர்களாகி விடமுடியாது. கணவனை இழந்த பெண் அல்லது ஆதரவற்றவர்களை ஏமாற்றுபவனும், பொருளுக்காக எத்தகைய கொடுமைகளையும் செய்பவனும், புல்லை மட்டுமே உண்பவனாக இருந்தாலும் அவன் மிருகமே ஆவான். எவருக்கும் தீங்கு நினைக்காமல் பகைவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன், பன்றி மாமிசம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அவனே பரமயோகியாவான்.

பக்தியை கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியுள்ள மனம்தான் முயற்சி செய்யும் ஆற்றல் பெற்றிருக்கும். எத்தகைய இடர்களையும் விலக்கிக் கொண்டு முன்னேற, அதனால் தான் முடியும். அதே நேரம், அளவுக்கு மீறிய மகிழ்ச்சி கூடாது. அது, நமது ஆழமான சிந்திக்கும் ஆற்றலைக் குலைத்து விடும்.

லட்சியம் இல்லாமல் வாழாதே

இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.
என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.
எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.
உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.
மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்.

உழைக்கும்போதே உயிர் பிரியட்டும்

  • தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
  • மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இருதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது. நான் உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் பிறருக்காக உழைத்து உழைத்து அந்தப் பணியில் இறந்து போவதையே நான் விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் இறந்து போனால் நான் மிகவும் மகிழ்வேன். எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது? இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
  • உங்களிடமே நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஒரு காலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான் விஷயம். உங்கள் அனைவரிடமும் எல்லையற்ற ஆற்றல் குடிகொண்டிருக்கிறது. அதனை பயன்படுத்துங்கள்.

வயிற்றுக்கு பிறகு தான் எல்லாம்...

மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை லட்சியம். மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பது அறிவுடைய செயலாகாது. ஒருவன் இங்கேயே, இப்போதே, இன்பத்தைப் பெற வேண்டும். இப்படிப்பட்ட இன்பத்தைத் தரக்கூடிய மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.

எப்போதெல்லாம் ஒரு மதம் வெற்றி பெறுகிறதோ அப்போதெல்லாம் அந்த மதத்திற்குப் பொருளாதார வலிமை இருக்க வேண்டும். அதைப்போல ஆயிரக்கணக்கான மதப்பிரிவுகள் அதிகாரத்திற்கு வரப் போராடியபடி இருக்கலாம். ஆனால், உண்மையில் பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்கக்கூடிய மதம் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்றும். வயிறுதான் மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவன் நடந்துசெல்லும்போது வயிறுதான் முதலில் போகிறது. பிறகு அதைத் தொடர்ந்து அவனுடைய தலை போகிறது. இதை நீங்கள் பார்த்ததில்லையா? மனிதனின் தலை முதலில் போகப் பல யுகங்கள் ஆகும்.

உங்களுடைய குழந்தைக் கனவுகள் கலைய ஆரம்பித்து, பொருள்களை உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்க்க ஆரம்பிக்கும்போது, உங்களுடைய தலை போய் விடுகிறது (இறந்து போகிறாய்).
ரசாயனமும், இயற்கை விஞ்ஞானமும் எப்படி இந்த பவுதிக உலகம் பற்றிய உண்மைகளைக் கையாள்கின்றனவோ, அதைப்போலவே மதம் அரிய தத்துவ உண்மைகளைக் கையாள்கிறது. ஒருவன் ரசாயனத்தைக் கற்க இயற்கை என்னும் புத்தகத்தை படிக்க வேண்டும். உன்னுடைய மனம், இதயம் ஆகியவைதாம் மதத்தைக் கற்பதற்கு நீ படிக்க வேண்டிய நூல்களாகும்.

நீ தான் அனைவருக்கும் தலைவன்

  •  பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, 'நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்' என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை உடைத்து எறியவும் முடியும்.

  • எந்தச் செயலும் உனக்கு முக்தி தர இயலாது. ஞானம் மட்டுமே அதைத் தர முடியும். ஞானத்தைத் தடுக்க முடியாது. அதை ஏற்பதோ தடுப்பதோ மனத்தால் முடியாது. ஞானம் வரும்போது மனம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே, ஞானம் மனத்தின் செயல் அல்ல. மனத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

  •  உன் சொந்த இயல்பிற்கு உன்னைத் திரும்பக் கொண்டு வரவே, செயலும், வழிபாடும் அமைந்துள்ளன. உடலை ஆன்மா எனக் கருதுவது முழு மனமயக்கம். உடலுடன் இருக்கும்போதே நாம் முக்தர்களாகலாம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் பொதுவான எதுவும் இல்லை.

  • 'சித்', 'அசித்', 'ஈஸ்வரன்' என்பதற்கு, ஆன்மா, இயற்கை, கடவுள் என்றும், உணர்வுள்ளது, உணர்வற்றது, உணர்வைக் கடந்தது என்றும் ராமானுஜர் மூன்றாகப் பிரிக்கிறார். இதற்கு மாறாக சங்கரர், 'சித்' அதாவது ஆன்மாவும், இறைவனும் ஒன்றே என்கிறார். இறைவனே உண்மை, இறைவனே அறிவு, இறைவனே எல்லையற்றவர்.

Thursday, June 10, 2010

இனியும் தூங்காதே!

ஒரு காலத்தில் பர்மாவில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து, அகதிகள், இந்தியாவுக்கு வந்தனர்; சமீப காலங்களில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்.
அதாவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதைத் தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இப்போது, இந்தியனே, இந்தியாவுக்குள் அகதியாகும் பரிதாபம் நடந்து வருகிறது. உங்கள் வீட்டிலேயே, நீங்கள் அகதி என்றால் எப்படி இருக்கும்?
இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது, அமெரிக்காவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை!
உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்! அணுகுண்டு செய்து விட்டோம்! உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம் நாம்! எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு முன் போல் திருவோட்டை ஏந்தி, வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை நம்மிடம் — இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன!
இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில வருடங்களில், தனக்கு சமமாகவோ - தனக்குப் போட்டியாகவோ வந்து விடக் கூடும்; இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இந்தியாவைத் துண்டாட பல வழிகளிலும் முயன்று வருகிறது.
அவற்றில் ஒன்றாக நான் சமீபத்தில் கேள்விப்பட்டது:
இந்தியாவில் உள்ள ஜாதிகள் - அவற்றின் உட்பிரிவுகள் பற்றியும், எந்த ஜாதிக்கு எந்த ஜாதி எதிர் - யாருக்கும், யாருக்கும், நல் உறவு என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய ஏராளமாக பணம் ஒதுக்கி உள்ளதாம்!
இந்த பணத்தை, "உதவித் தொகையாக...' இங்குள்ள ஆராய்ச்சி (பி.எச்டி.,) மாணவர்களுக்கு மிகத் தாராளமாக அளித்து, ஆராய்ந்து வருகிறதாம்! இதே போல மொழி உணர்வுள்ள இயக்கங்கள், சங்கங்கள், குழுக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய உதவி வருகிறதாம்!
"யோவ் அந்து... இதனால அமெரிக்கக்காரனுக்கு என்னய்யா பலன்?' என்று கேட்கிறீர்களா?
இப்போ, அமெரிக்கா செலவு செய்யும் பணம் அனைத்தும் மூலதனம் - யாருக்கு யார் எதிர் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களில் பலம் பெற்றவர்களுக்கு நேரடியாகவும், பலம் அதிகம் இல்லாதவர்களுக்கு மறைமுகமாகவும் உதவி, உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை மேலுலகம் அனுப்பி, ஒரு மாநிலத்தவனை, இன்னொரு மாநிலத்தவன், ஒரு ஜாதிக்காரனை, ஒரு மதத்தவனை மற்ற ஜாதி, மத மக்கள் பகையாளியாக நோக்க வைத்து, "அல்டி மேட்டாக' நாட்டைத் துண்டாடுவது தான் அவர்கள் நோக்கம்!
இதன், முதல் கட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மூலம் தூண்டிவிட்டு, காஷ்மீரில் சிறுபான்மையினராக இருப்பவர்களை காஷ்மீரை விட்டு துரத்தி அடித்துள்ளது. நம் தாய் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக நாட்டில் பல பாகங்களுக்கு சிதறிச் சென்றுள்ளனர்!
இதே செயல்முறையைப் பயன்படுத்தி, தமிழகத்திலும் வாலாட்ட திட்டம் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்!
இந்தியனே... நீ விழித்துக் கொள்ளும் நேரம் நெருங்கி விட்டது; இனியும் தூங்காதே!

Sunday, June 6, 2010

குணால் ராஜன்...ஹாலிவுட்டை கலக்கும் புதுவை சவுண்ட் என்ஜினியர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: செல்லுமிடமெல்லாம் சிறப்பு சேர்ப்பது தமிழனின் பலம். இதற்கு இன்னுமொரு உதாரணம் குணால் ராஜன். ஜஸ்ட் 25 வயதில் ஹாலிவுட்டின் முன்னணி சவுண்ட் என்ஜினியராகக் கலக்குகிறார்.



புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர் குணால் ராஜன், 20 வயதில் அமெரிக்காவில் செட்டிலானவர், அடுத்த சில ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்கள், பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் இணையதள படத் தொடர்கள் என பெரிய சாதனையைச் செய்துள்ளார்.

ஸ்டெப் அப் 1-2-3 எனும் புகழ்பெற்ற பட சீரிஸை இயக்கிய ஜான் எம் சூவின் அடுத்த படம் எல்டிஎக்ஸ் -க்கு குணால்தான் சவுண்ட் டிசைனர். சமீபத்தில்தான் 'ஃபியர் கிளினிக்' வெப்சீரிஸ் ஒன்றுக்கு சவுண்ட் டிசைன் செய்ததற்காக ஹாலிவுட்டில் புகழ் மிக்க 'ஸ்டீரிமி அவார்டு' வாங்கியிருக்கிறார் குணால்.

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பணியாற்றியுள்ளார் குணால். இந்தப் படம்தான் முழுமையான சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம். கஜினி (இந்தி), ப்ளூ படங்களில் ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்போது மிகப்பெரிய பொறுப்பு ஒன்றையும் ஏற்றுள்ளார். அது ரஜினியின் எந்திரன் படத்துக்கு ரஸூலுடன் இணைந்து ஒலி வடிவமைப்பது.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குணால் ராஜனுடன், இயக்குநர் லேகா ரத்னகுமார் மூலமாக தொலைபேசியில் பேசினோம். அவர் கூறுகையில், "தியேட்டர்ல படம் பாக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதெல்லாம், தியேட்டரில் ஒலியலைகள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் பிரிந்து செல்லும் ஜாலத்தை பிரமிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

எனக்கு அந்த டெக்னிக்கை முழுசாக தெரிந்து கொள்ள ஆசை வந்தது. ப்ளஸ்டூ முடித்ததும் ஆடியோ சவுண்ட் பற்றிய கோர்ஸை தேர்ந்தெடுத்தேன். சிங்கப்பூரில்தான் படித்தேன். அமெரிக்காவில் சவுண்ட் டிசைனிங் கோர்ஸ் முடித்தேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். சொந்தமாக ஸ்டுடியோவும் இருக்கிறது. பல ஸ்டுடியோக்களுக்காகவும் பணியாற்றுகிறேன்.." என்றவரிடம், எந்திரன் வாய்ப்பு குறித்து கேட்டோம்.

"எந்திரனுக்கு ரஸூல் பூக்குட்டிதான் சவுண்ட் டிசைன் பண்ணுகிறார். அவரது மும்பை ஸ்டுடியோவில் 40 சதவிகித பணிகளும், இங்கே என்னுடைய ஸ்டுடியோவில் வைத்து 40 சதவிகித பணிகளும் நடக்கின்றன. அதில் என்னுடைய பங்களிப்பும் உண்டு. எந்திரன் ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படம். அதற்கு சவுண்ட் டிசைனிங் மிக முக்கியம். நிச்சயம் மைல்கல்லாக இருக்கும். படத்தின் மிக சிக்கலான காட்சிகளை இங்கு வைத்துதான் சவுண்ட் டிசைன் செய்கிறோம்" என்றார்.

என்னதான் சிறப்பாக சவுண்ட் டிசைன் செய்தாலும், அதை துல்லியமாக ஒலிக்கத் தேவையான வசதிகளைக் கொண்டதாக திரையரங்குகள் இருக்க வேண்டும் என்கிறார் குணால்.

"இன்றைய சூழலில் 10 சதவீத திரையரங்குகள் கூட துல்லியமான சவுண்ட் சிஸ்டத்துடன் இல்லாததால், படத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. இதனை சரி செய்ய வேண்டும். அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு 7 பாயிண்டுகளில் ஒலிப்பதிவு செய்தோம். ஆனால் இங்குள்ள தியேட்டர்களில் 4 பாயிண்டுகள் கூட கேட்கவில்லை..." என்றார் குணால்.

என்னதான் ஹாலிவுட் படங்களில் பிஸியாக இருந்தாலும், தமிழ்ப் படங்களிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பது குணாலின் ஆசை. இப்போதுதான் சில முன்னணி இயக்குநர்கள் சவுண்ட் டிசைனிங்குக்கும் பெரிய முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளனராம். விரைவில் முக்கியமான இயக்குநர் ஒருவர் படத்துக்கு சவுண்ட் டிசைன் செய்யவிருக்கிறாராம் குணால்