Friday, December 10, 2010

பிடித்ததை செய் வெற்றி நிச்சயம்

பிடித்ததை செய் வெற்றி நிச்சயம்!' பேக்கரி நடத்தும் ஜூலியட் வளர்மதி: படித்தது, வளர்ந்ததெல்லாம் சென்னையில். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். சின்ன வயதில் இருந்தே தேவையான சுதந்திரம், தைரியம் கொடுத்து வளர்த்தாங்க. ஒன்பதாவது படிக்கும் போதே தனியாக தாசில்தார் அலுவலகத்திற்கு போய் ஜாதி சான்றிதழ் வாங்கும் அளவிற்கு பழகிக் கொடுத்தாங்க. தடகள விளையாட் டில் தேசிய அளவில் பதக்கம், ஜனாதிபதி கையால் சமூக சேவைக்கான விருது கூட வாங்கியிருக்கிறேன். சென்னை அரசு பாலிடெக்னிக்கில் இன்ஸ்ட்ரூமென்ட் டெக்னாலஜி முடித்துவிட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அப்ரன்டீசா சேர்ந்தேன். அந்த வருடம் இந்திய அளவில் ஐந்து பேருக்குதான் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதில் நானும் ஒருத்தி. அடுத்து, சென்னை அண்ணா பல்கலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். அதன் பின், திருமணம். என் கணவர் என்னை பி.இ., படிக்க வைத்தார். அடுத்து எம்.இ., முடித்தேன். உடனே தனியார் கல்லூரியில் லெக்சரர் வேலை கிடைத்தது. ஏனோ நான் பார்த்த வேலையில் ஒரு பிடிப்பில்லாமல் இருந்தது.
சுயதொழிலில் தான் எனக்கு ஆர்வம் இருந்தது. கணவரின் ஐஸ்கிரீம் பார்லர் பிசினசில் உதவியா இருந்தேன். அங்கு தான் வியாபாரத்தின் உண்மையான கஷ்டங்களை புரிந்து கொண்டேன். அதன் பின், பல தொழில்களை பரிசீலித்து, கடைசியாக வருடத்தில் எல்லா நாளும் வியாபாரம் நடக்கும் பேக்கரி தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். இந்த தொழிலுக்கான பயிற்சி, முதலீடு, மூலப்பொருட்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன். ஆரம்ப கட்ட வேலைகளை பொறுமையா, பொறுப்பா சில மாதங்கள் செய்தேன். இறுதியாக பேக்கரியை துவக்கிவிட்டேன். பேக்கரி ஆரம்பித்து ஒரு வருடம் தான் ஆகப் போகிறது. இப்ப மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. 20 பேர் வேலை செய்கின்றனர். ஆர்வமும், உழைப்பும் இருந்தா கண்டிப்பா உயர்வைத் தரும் என்பது என் அனுபவ பாடம்.

No comments:

Post a Comment